திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்
பண் - நட்டபாடை
புவம்வளி கனல்புனல் புவி(*)கலை
    யுரைமறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர்
    திகழ்தரும் உயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு
    பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர்
    செழுநில னினில்நிலை பெறுவரே.

(*) கலைபுரை என்றும் பாடம்.
1
மலைபல வளர்தரு புவியிடை
    மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள்
    நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுவறி துயிலமர்
    அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை
    பவர்திரு மகளொடு திகழ்வரே.
2
பழுதில கடல்புடை தழுவிய
    படிமுர லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்
    குலம்மலி தருமுயி ரவையவை
முழுவதும் அழிவகை நினைவொடு
    (*)முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர்
    தொழுமவர் புகழ்மிகு முலகிலே.

(*) முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம்.
3
நறைமலி தருமள றொடுமுகை
    நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு
    நியதமும் வழிபடும் அடியவர்
குறைவில பதமணை தரஅருள்
    குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது
    நினைபவர் செயமகள் தலைவரே.
4
சினமலி யறுபகை மிகுபொறி
    சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு
    தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதெழி லுருவது கொடுஅடை
    தகுபர னுறைவது நகர்மதில்
கனமரு வியசிவ புரம்நினை
    பவர்கலை மகள்தர நிகழ்வரே.
5
சுருதிகள் பலநல முதல்கலை
    துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர
    வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி
    யடைவகை நினையர னுறைபதி
திருவளர் சிவபுரம் நினைபவர்
    திகழ்குலன் நிலனிடை நிகழுமே.
6
கதமிகு கருவுரு வொடு(*)வுகி
    ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை
    மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய
    எழிலரி வழிபட அருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுரம்
    நினைபவர் நிலவுவர் படியிலே.

(*)உகிரிடவட என்றும் பாடம்.
7
அசைவுறு தவமுயல் வினிலயன்
    அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை
    இருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு
    விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுரம் நினைபவர்
    செழுநில னினில்நிகழ் வுடையரே.
8
அடல்மலி படையரி அயனொடும்
    அறிவரி யதொரழல் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர்
    வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண
    துடையுரு வெளிபடு மவன்நகர்
திடமலி பொழிலெழில் சிவபுரம்
    நினைபவர் வழிபுவி திகழுமே.
9
குணமறி வுகள்நிலை யிலபொரு
    ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி
    மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர
    னுறைதரு பதியுல கினில்நல
கணமரு வியசிவ புரம்நினை
    பவரெழி லுருவுடை யவர்களே.
10
திகழ்சிவ புரநகர் மருவிய
    சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை
    நலமலி யொருபதும் நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு
    நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின்
    மிகைபுணர் தரநலம் மிகுவரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.112 திருச்சிவபுரம்
பண் - வியாழக்குறிஞ்சி
இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கரம் மருவிய சதுரன்நகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.
1
அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்
வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே.
2
மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்
அலைமல்கும் (*)அரிசிலி னதனயலே
சிலைமல்கு மதிலணி சிவபுரமே.

(*) அரிசில் என்பது ஒரு நதி.
3
மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தன்நகர்
பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே.
4
வீறுநன் குடையவள் மேனிபாகங்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறலுண் டெழுதரு சிவபுரமே.
5
மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறது வாக்கிய நிமலன்நகர்
நாறுடை நடுபவர் உழவரொடுஞ்
சேறுடை வயலணி சிவபுரமே.
6
ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.
7
எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முபவலி யடக்கிய முதல்வன்நகர்
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே.
8
சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவன்நகர்தான்
கங்கலும் பறவைகள் கமுகுதொறுஞ்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.
9
மண்டையின் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலன்நகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே.
10
சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்வல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.125 திருச்சிவபுரம் - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.
1
படரொளி சடையினன் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே.
2
வரைதிரி தரவர வகடழ லெழவரு
நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
உரைதரும் அடியவர் உயர்கதி யினரே.
3
துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய
மணிமிட றனதடி இணைதொழு மவரே.
4
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்
இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமையுடை யவனே.
5
முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி
சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே.
6
வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை யிலரே.
7
கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்
உரநெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
பரனென அடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே.
8
அன்றிய லுரவுகொள் அரியய னெனுமவர்
சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே.
9
புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்
இத்தவம் முயல்வறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.
10
புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com